திருஷ்யம் - சாட்சிப் பிழை!

கேபிள் டிவி சர்வீஸ் நடத்தும் ஜோர்ஜ்குட்டி (மோகன்லால்), அதி தீவிர சினிமா ரசிகர். நான்காம் வகுப்பு மட்டுமே படித்திருந்தாலும், அனுபவ அறிவு பெற்றவர். அன்பான மனைவி (மீனா) மற்றும் இரு மகள்களோடு; சிக்கனமாக குடும்பம் நடத்தும் பொறுப்பான மனிதர். ஜோர்ஜ் இல்லாத சமயம், வீடு நுழைந்து பாலியல் ரீதியாக மிரட்டும் போலிஸ் IG-யின் மகனை, எதிர்பாராவிதமாக கொலை செய்து விடுகிறாள் அவரின் மூத்த மகள்! மறுநாள் காலை வீடு திரும்பும் ஜோர்ஜ், தன் திரைப்பட ஞானத்தைப் பயன்படுத்தி, தடயங்களை முற்றிலும் அழித்து விடுகிறார்.

ஆனால், அவனுடைய காரை அப்புறப் படுத்தும் போது உள்ளூர் கான்ஸ்டபிள் ஒருவர் அதைப் பார்த்து விடுகிறார்! இதை அறியும் போலீஸ் IG மற்றும் அவரின் கணவர், ஜோர்ஜை ஆதாரத்துடன் சிக்க வைக்க முயல்கின்றனர். படிப்பறிவற்ற ஜோர்ஜ்குட்டி, தனது சினிமா அறிவின் மூலம், சாட்சியங்களை தனக்கு சாதகமாக மாற்றியும், போலிஸ் விசாரணைகளுக்கு தனது குடும்பத்தை மன ரீதியாக தயார் படுத்தியும், சட்டத்தின் ஓட்டைகளுக்குள் திறமையாக புகுந்து விளையாடுகிறார்; இறுதி வெற்றி யாருக்கு?!

ரு கதையை அசுவாரசியமாகச் சுருக்கிச் சொல்வதற்கு மேற்கண்ட இரு பத்திகள் நல்லதொரு எடுத்துக்காட்டு என்றால்; அதே கதையை, அதிசுவாரசியமாக திரைப் படுத்துவதற்கு சிறந்த எடுத்துக்காட்டு திருஷ்யம்!


முதல் ஒரு மணி நேரத்தில், ஜோர்ஜ்குட்டியின் குணத்தையும், குடும்பத்தையும் நமக்குக் காட்டும் இயக்குனர்; மீதமிருக்கும் ஒன்றே முக்கால் மணி நேரத்திற்கு, ஜோர்ஜ் குடும்பத்தினர் போலீசிடம் சிக்கிக் கொள்ளக் கூடாதே என்று பதைக்கும் அளவுக்கு, நம்மையும் அவர்களில் ஒருவராகக் கட்டிப் போட்டு விடுகிறார்! அக்காட்சிகளைப் பற்றி விரிவாக எழுதி, இப்படத்தைக் காண எண்ணியுள்ளவர்களின் உற்சாகத்தை கெடுக்க விரும்பவில்லை.

நான் அரிதாகவே பிற மொழிப் படங்களைப் பார்ப்பேன்! மலையாள சானல்களில் ஓடும் தமிழ்ப் படங்களை பார்த்த அளவிற்குக் கூட, மலையாளப் படங்களைக் கண்டதில்லை! :D அதிலும், எனது கேரள நண்பர்கள் சிலர், மாஸ் மசாலா தமிழ்ப் படங்களை மட்டும் தேடிப் பிடித்து பார்த்து விட்டு, ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் நக்கல் அடிக்கும் ரகம் என்பதால்; கில்மா தவிர்த்த மற்ற மலையாளப் படங்களை நான் பார்த்ததே இல்லை என அவர்களிடம் சொல்லிக் கொள்வதில் எனக்கு ஒரு அற்ப சந்தோஷம்!

இப்படத்தின் திரைக்கதை, இயக்கம், ஒளிப்பதிவு, இசை, நடிப்பு உள்ளிட்ட ஒவ்வொரு அம்சமும் மிகச் சிறப்பாக அமைந்துள்ளன! மோகன்லாலின் நடிப்புக்கு சாட்சியாக, போலீஸ் விசாரணையின் போது அவர் அமர்த்தலாகச் சிரிக்கும் சிறு காட்சியே போதும்! இந்தப் படத்தை, கமல் தமிழில் ரீமேக் செய்கிறாராம்! அது சொதப்பினால், என் நண்பர்களின் நக்கலுக்கு ஆளாக வேண்டி இருக்கும் என்று உள்ளூர பயம் இருந்தாலும்; கமலை வைத்து இயக்குவதும் அதே டைரக்டர் தான் என்பதால், ஒட்டு மொத்த பழியையும் அவர்(கள்) மீது போட்டு தப்பி விடும் சாமர்த்தியமும் இருக்கிறது! :P

இந்தப் படத்தில் ஏதாவது 'ஓட்டைகளைக்' கண்டு பிடித்து, நண்பர்களை வெறுப்பேற்ற வேண்டும் என்று "ஒக்காந்து" யோசித்ததில்...

மலையாள சினிமாவிலும் லாஜிக் மீறல்கள் உண்டு என்று சொல்ல இரண்டு பாயிண்டுகளும்...
1. ஜோர்ஜ்குட்டி மற்றும் அவர் குடும்பத்தினர் ஒருவரிடம் கூட மொபைல் இல்லை என்பதெல்லாம் நம்பும்படி இல்லையே?! என்னதான் அவர் பட்ஜெட் பத்மநாபனாக இருந்தாலும், இன்றைய சூழ்நிலையில் மொபைல் என்பது ஆடம்பரமில்லா அத்தியாவசியத் தேவை இல்லையா?!
2. ஜோர்ஜ்குட்டி மீடியா வெளிச்சத்தில் கேரளா முழுக்க பிரபலமாகி விடுகிறார்! அவருக்கு (பழைய) மொபைல் ஃபோன் விற்ற கடைக்காரர், போலீஸிடம் போட்டுக் கொடுக்கும் வாய்ப்பு இருக்கிறதே?!

... என்னதான் நக்கல் அடித்தாலும் தமிழ் சினிமாவை அவர்களால் தவிர்க்க முடியாது என்று சொல்லி வெறுப்பேற்ற இரண்டு பாயிண்டுகளும் சிக்கியிருக்கின்றன! :D
1. ஒரு காட்சியில் 'விஸ்வரூபம்' படப் போஸ்டர் & மற்றொரு காட்சியில் தலைவா படப் பாடல் - இவை, கதைக்கு தொடர்பில்லாமல் படத்தில் வருகின்றன!
2. தன் வீட்டில் வைத்து கொல்லப் பட்ட ஐ.ஜி. மகனின் மொபைல் சிம் & 'டவர் லொகேஷன் ஹிஸ்டரி'-யை வைத்து போலீஸ் மோப்பம் பிடித்து விடக் கூடாது என்பதற்காக, "உதயம் NH4" படத்தில் வரும் காட்சிகளைக் கொண்டு அவர்களை திசை திருப்பத் திட்டம் போடுவார் ஜோர்ஜ்!

னால் இது போன்ற அற்ப அரசியலை மறந்து, பரந்த மனதுடன், ஒவ்வொரு தமிழ் சினிமா ரசிகரும் பார்த்து ரசிக்க வேண்டிய படம் - திருஷ்யம்! இதன் ஒரிஜினல் டிவிடி, 130 ரூபாய்க்கு கிடைக்கிறது - ஆங்கில சப்-டைட்டில்களுடன்! "மலையாளப் படத்துக்கெல்லாம் சப்-டைட்டில் தேவையா?!" என்று கேட்கக் கூடாது ;) இந்தப் படத்திற்கு அது மிகவும் அவசியம்!
***
முந்தைய பதிவு: வவ்வாலுக்கு ஒரு சவால் - பேட்மேன்: முதல் வருடம்!

கருத்துகள்

  1. Planning to watch this. Try Mumbai Police (Prithhvi Raj). It is s superb thriller. You can also try Unstad Hotel and Salt and Pepper (going to be in Tamil "Un Samayal Arayil" )

    பதிலளிநீக்கு
  2. இந்த படத்தை பற்றி அனைத்து ஊடங்கங்களும் சிறப்பாக பேசுகின்றன. படத்தை பார்க்கும் வாய்ப்பு இன்னும் கிட்டவில்லை !

    இந்த இடுகையில் என்னை மிகவும் கவர்ந்தது உங்களின் நேர்மை !

    " கில்மா தவிர்த்த மற்ற மலையாளப் படங்களை நான் பார்த்ததே இல்லை என அவர்களிடம் சொல்லிக் கொள்வதில் எனக்கு ஒரு அற்ப சந்தோஷம்! "

    ஹா... ஹா !

    " ஆனால் இது போன்ற அற்ப அரசியலை மறந்து, பரந்த மனதுடன், ஒவ்வொரு தமிழ் சினிமா ரசிகரும் பார்த்து ரசிக்க வேண்டிய படம் "

    பத்திரிக்கையின் ஒரு பக்கத்துக்குள் அடக்க முடிந்த ஒரு இடுகையினுள் படத்தை மட்டுமல்லாமல் இரு பிராந்திய மொழிகள் சார்ந்த சினிமா அரசியலையும் சுவாரஸ்யமாய் விமர்சித்து, தீர்ப்பும் அளித்து.... Hats up !

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    பதிலளிநீக்கு
  3. உங்கள் விமர்சனம் படித்தேன் நண்பரே, நன்று.

    ஜோர்ஜ்குட்டி மற்றும் அவர் குடும்பத்தினர் ஒருவரிடம் கூட மொபைல் இல்லை என்பதெல்லாம் நம்பும்படி இல்லையே?! என்னதான் அவர் பட்ஜெட் பத்மநாபனாக இருந்தாலும், இன்றைய சூழ்நிலையில் மொபைல் என்பது ஆடம்பரமில்லா அத்தியாவசியத் தேவை இல்லையா?!
    2. ஜோர்ஜ்குட்டி மீடியா வெளிச்சத்தில் கேரளா முழுக்க பிரபலமாகி விடுகிறார்! அவருக்கு (பழைய) மொபைல் ஃபோன் விற்ற கடைக்காரர், போலீஸிடம் போட்டுக் கொடுக்கும் வாய்ப்பு இருக்கிறதே?!

    இவற்றுக்கு பதில் சொல்கிறேன்.

    படத்தின் ஆரம்பத்தில் லாலின் அலுவலகத்தில் அவர் ஒரு போன்காலும் எடுப்பதில்லை, அவரது வேலைப்படி, அவரை நிறைய பேர் தொந்தரவு செய்வார்கள் என்பதால். எப்போதும் வீடு, அலுவலகம் என்பதால் லேண்ட் லைன் ஓகெ, பிள்ளைகளுக்கு தேவையில்லைய்

    மொபைல் போன் விற்றவரைத் தவிர மற்ற அனைவரையும் சந்தித்து காட்சிகளை பதியவிடுகிறார். சாமர்த்தியமாக மொபைல் போன் விற்றவரைத் தவிர்த்துவிடுவார். மொபைல் விற்றவர் லாலை நினைவு வைத்துக் கொண்டிருக்க முடியாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏற்றுக் கொள்ளக் கூடிய விளக்கங்களே... பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே!

      நீக்கு

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் ப்ளேடு: https://www.facebook.com/Bladepedia