அல்கெமிஸ்ட்டும், அறுபது ஆடுகளும்!

ஸ்பெயினின் அண்டலூசியா பிராந்தியத்தில் வசிக்கும் சாண்டியாகோவுக்கு, பயணம் செய்வது மிகவும் பிடிக்கும். "ஆடு மேய்ப்பவர்களுக்குத் தான், நில்லாத பயணம் சாத்தியம்!" என்று அவனது தந்தை கடிந்து கொள்ள; அவனோ அதே காரணத்திற்காக, அந்தப் பணியையே மேற்கொள்கிறான்! ஆடுகளுக்கு உணவும், நீரும் தேடித் தரும் ஒரே குறிக்கோளில் அவனது ஒவ்வொரு நாளும் கழிகிறது; இரு வருட மேய்ச்சல் பயணங்களில் பல பாடங்களைக் கற்கிறான்!

பாழடைந்த தேவாலயமொன்றில் தங்கும் அவன், "எகிப்தியப் பிரமிடுகளின் அருகே பெரும் புதையல் கிடைப்பதாகக்" கனவு காண்கிறான்! தூர தேசம் என்பதால் தயங்கி நிற்கும் அவனை, முதியவர் ஒருவர் சந்திக்கிறார்! பிறரின் எண்ணங்களையும், வாழ்க்கையையும் படித்தறியும் சக்தி கொண்ட அவர், "இலக்கை அடைய தீர்மானித்தவனை, உலகிலுள்ள ஆன்மாக்கள் அனைத்தும் ஒன்று கூடி வழிநடத்தும்!" என்று கூறி ஊக்குவிக்கிறார்! தனது ஆடுகளை விற்று, அப்பணத்தில், கனவினை நனவாக்க முயற்சிக்கும் ஒரு நெடிய பயணத்தை துவக்குகிறான் சாண்டியாகோ!

அவன் தனது இலக்கை அடைந்தானா...?!

சுய முன்னேற்ற நூல்கள் வாழ்வில் வெற்றி பெறுவதற்கான வழிமுறைகளை பட்டியலிடும்! மாறாக ஆன்மிக நூல்கள், முன்னேற்றம் என்பது பொன்னும் பொருளும் சேர்ப்பது அல்ல என்பதைத் தெளிவுறுத்தும்! வெற்றியாளர்களின்
சுய சரிதைகளோ, பெரும்பாலும் எழுதியவரின் துறை மற்றும் வாழ்க்கை சார்ந்த குறிப்புகளாக இருக்கும் - அனைவருக்கும் பொருந்தாது! பௌலோ கொயிலோவின் "தி அல்கெமிஸ்ட்" இம்மூன்றுக்கும் இடைப்பட்ட ஒரு நூல்! படிக்கச் சுவாரசியமான கற்பனைக் கதை என்பதால், கதையோடும், கதை நாயகனோடும் நம்மைப் பொருத்திப் பார்ப்பது எளிதாகி விடுகிறது!

புத்தகத்தின் முன்னுரையில், "நமக்காக வகுக்கப் பட்ட பாதையை நாம் சிறு வயது முதலே உணர்ந்திருக்கிறோம்! ஆனால், இலக்கை அடைவதற்குத் தடையாக, நான்கு காரணிகள் செயல்படுகின்றன" என்கிறார் பௌலோ:
1. கனவுகள் சாத்தியமல்ல என்ற பிறரின் கூற்றை நம்பி வளர்வது!
2. பிரியமானவர்களை பிரிய மனம் வராமல், ஒரே இடத்தில் தேங்கி நிற்பது!
3. தோல்வியைப் பற்றிய பயத்தால், முயற்சிகளைக் கைவிடுவது!
4. இலக்கை அடையப் போகும் பதட்டத்தில், பல தவறுகள் புரிவது!

"தகரத்தை தங்கமாக்குவது போல; முன்னேற்றம் என்பது, நம்மை நாமே அடுத்த நிலைக்கு உயர்த்திக் கொள்வதாகும்! மண்ணையும் பொன்னாக மாற்ற வல்ல அரிய பொருள், அனைவருக்கும் கிடைப்பதில்லை. ஆனால், நம்மை அடுத்த நிலைக்கு உயர்த்திக் கொள்ள வைக்கும் மூலப் பொருளை வேறெங்கும் தேடத் தேவையில்லை - நம்முள் இருக்கும் ஒன்றுபட்ட ஆன்மாவை உற்று நோக்கினாலே போதும், நமக்குரிய புதையலை நாம் அடையலாம்!" இது கதையில் வரும் 'அல்கெமிஸ்ட்'-டின் கூற்று! (தகரத்தையும் தங்கமாக்கும் வித்தை அறிந்த ரசவாதி)!

உண்மையில், ஒரு கட்டத்திற்கு மேல் நம்மை வளர்த்துக் கொள்ள, நாமே விரும்புவதில்லை! கையில் இல்லாத ஒன்றை அடைவதற்காக, கைவசம் இருக்கும் சுகங்களைக் விட்டுத் தர நமக்கு மனம் வருவதில்லை! மாற்றத்திற்கு பயந்து, "போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து!" என்று சமாதானம் சொல்லிக் கொள்கிறோம்! அல்லது, மற்றவர்கள் வகுத்த பாதையில் பயணித்து, நமது இலக்கை எட்ட முடியவில்லையே என பரிதவிக்கிறோம்! சில சமயங்களில் வெற்றிக் கோட்டை நெருங்கும் சமயம், பொறுமையிழந்து திரும்பி விடுகிறோம்!

கனவுகளைத் தொடர்பவர்கள், பெரும் சிரமங்களைச் சந்தித்தாலும் தங்கள் இலக்கை ஒருநாள் அடைந்தே தீர்கின்றனர்! ஏனையோர், தத்தம் முயற்சிகளின் அளவைப் பொருத்து - ஆடு மேய்ப்பவர்களின் மேய்ப்பாளராகவோ, ஆடு மேய்ப்பவராகவோ அல்லது அந்த ஆடுகளில் ஒன்றாகவோ மாறி; உணவும், நீரும் தேடுவதே ஒரே குறிக்கோளாகக் கொண்டு, இலக்கின்றி அலைந்து திரிந்து கொண்டே இருக்கின்றனர் - இலக்கை கைவிட்ட அந்த ஒரு கவலையைத் தவிர்த்த வேறு கவலைகள் ஏதுமின்றி!

இந்த உண்மைகளைப் புரிந்து கொள்ள 'அல்கெமிஸ்ட்' நூலைப் படிக்க வேண்டும் என்ற அவசியமில்லை தான்! உங்கள் மனத்தைக் கேட்டுப் பாருங்கள், அது சோகமாக "மே" எனக் கூறி ஆமோதிக்கும்! 'அல்கெமிஸ்ட்' போன்ற நம்பிக்கை தரும் நூல்களைப் படித்த அனைவரும், தத்தம் இலக்குகளை எட்டப் போவதில்லை தான்! ஆனால், இலக்கை விட்டு பயணித்து வந்திருக்கும் தொலைவை, அவர்களுக்கு அவை நிச்சயம் நினைவுறுத்தும்!

ச்சரிக்கை: தொடரும் பத்திகளில், முழுக்கதையும் விவரிக்கப் பட்டிருப்பதால், இந்நூலை படிக்க எண்ணி இருப்பவர்கள் மேற்கொண்டு தொடர வேண்டாம்!

...சாண்டியாகோ அவனது இலக்கை அடைந்தானா?!

ப்பிரிக்க கண்டத்தின் கரையைத் தொட்டதும், பணம் பறி போகிறது. பிரமிடுகள் இருப்பதோ எகிப்தில், பரந்த பாலைவனங்களைத் தாண்டி வெகு தொலைவில்; ஸ்பெயின் திரும்பவும் வாய்ப்பில்லை! மனதைத் தேற்றிக் கொண்டு, அதே நகரில் ஒரு பணியில் அமர்கிறான். அவனது முதலாளி, கனவுகளைக் மெய்ப்படுத்திக் கொள்ள விரும்பாத ஒரு சராசரி மனிதர் என்றாலும், இருப்பதை வைத்து திருப்தியுடனேயே வாழ்கிறார்!

தனது மதியூகமான யோசனைகளால், முதலாளியின் வியாபாரத்தை விரிவாக்கும் சாண்டியாகோ, ஒரே வருடத்தில், 120 ஆடுகள் வாங்கக் கூடிய அளவுக்கு பொருள் ஈட்டுகிறான்! ஆடு மேய்க்கும் பணிக்கு திரும்புவதா, அல்லது தனது கனவுகளை விரட்டிச் செல்வதா என அவனுள் ஒரு குழப்பம்! "பழைய நிலைமைக்கு உன்னால் எப்போது வேண்டுமானாலும் திரும்ப முடியும்; ஆனால், கனவுகளைக் கை விட்டால், அவை ஒருநாளும் நிறைவேறாமலேயே போய் விடக் கூடும்" என்ற உள்ளத்தின் குரல் கேட்டு, ஸ்பெயின் திரும்பும் முடிவைக் கைவிடுகிறான்!

கடுமையான பயணம் அவனுக்கு பல பாடங்களைக் கற்றுத் தருகிறது! உலகைப் புரிந்து கொள்ள மொழிகள் தடையில்லை; வார்த்தைகளால் பேசா மொழியே உலப் பொது மொழி என்ற உண்மையை உணர்கிறான்! சலனங்களையும், சகுனங்களையும் கண்டறிவதில் தேர்ச்சி பெறுகிறான்!

இடையே, பாலைவனச் சோலை ஒன்றில் சிறிது காலம் தங்க நேர்கிறது! அப்பகுதிக்கு நேரவிருக்கும் ஆபத்தை முன்னறிந்து சொல்வதால், தலைவர்களின் நன்மதிப்பையும், பரிசாக ஐம்பது தங்கக் கட்டிகளையும் பெறுகிறான்! அங்கு வசிக்கும் ஒரு பெண் மேல் காதல் வயப்பட்டு, அங்கேயே தங்கி விட எண்ணுகிறான்! "உண்மையான காதல் கட்டிப் போடுவதில்லை; உன் கனவை வென்றதும், திரும்பி வா!" என்று வழியனுப்புகிறாள் அப்பெண்!

அல்கெமிஸ்ட் ஒருவரின் துணையுடன் தனது பயணத்தைத் தொடர்கிறான் சாண்டியாகோ! வழியில் மீண்டும் ஒருமுறை தனது உடைமைகளை இழந்து, பல இன்னல்களுக்கு ஆளாகிறான்! ஆனால், இயற்கையுடனும், தனது இதயத்துடனும் பேசக் கூடிய அற்புத ஆற்றல் அவனுக்குக் கிடைக்கிறது! அல்கெமிஸ்ட், அவனுக்கு தங்கத்தைப் பரிசளித்து விடைபெறுகிறார்!

மீதத் தூரத்தை தனியே கடந்து, புதையல் இருக்கும் இடத்தை சென்றடைகிறான் சாண்டியாகோ! ஆனால், எவ்வளவு ஆழமாகத் தோண்டியும் புதையல் தட்டுப் படாமல் போகிறது! அங்கு வரும் ஒரு கும்பல், அவனை பலமாக காயப் படுத்தி, அவன் கைவசம் இருக்கும் தங்கத்தைப் பறித்துக் கொள்கிறது! புதையல் இருப்பதாகக் கனவு கண்டு, அதைத் தேடி எகிப்து வந்த கதையைக் அக்குழுவின் தலைவனிடம் கூறுகிறான் சாண்டியாகோ!

அதற்கு அக்குழுவின் தலைவன், "ஸ்பெயின் தேச மேய்ச்சல் பரப்பினில் உள்ள பாழடைந்த தேவாலயமொன்றில், புதையல் இருப்பதாக நானும் தான் கனவு கண்டிக்கிறேன்; கனவுகளை நம்பியா இத்தனை தூரம் பயணித்தாய்?!" என்று இளக்காரமாகச் சிரிக்கிறான்! மகிழ்வுடன் ஸ்பெயின் திரும்பும் சாண்டியாகோ, தான் முன்பொரு நாள் படுத்துறங்கி கனவு கண்ட அந்த தேவாலயத்திலேயே, பெரும் புதையலைக் கண்டெடுக்கிறான் - அவனது கனவு மெய்ப்படுகிறது!
Image Credits: PauloCoelho.com & Wikipedia

கருத்துகள்

  1. மீ தி ப்ர்ஸ்ட்??? ஹி ஹி ஹி !

    இந்த புத்தகத்தை நான் நீண்ட நாட்களுக்கு முன் படிக்கலாம்ன்னு எடுத்து ஒரு பத்து இருபது பக்கம் தாண்டியிருப்பேன். good omen, bad omen, அப்படீன்னு நிறைய சங்கதிகள்! அவ்வளவு சுவராஸ்யம இல்லாததால தூக்கி போட்டுட்டேன்.

    உலக புகழ் பெற்ற புத்தகம்னாலும் நம்ம preference கோடுக்குள் இல்லைன்னா அதில் பக்கம் தள்ளுவது மிக கடினம். மொக்கையான புத்தகம்னாலும் நம்ம preference கோடுக்குள் இருந்தால் அவ்வளவு ஆர்வமா படிக்க முடியும். ஆனால் இதே போல இருந்த "THE FIVE PEOPLE YOU MEET IN HEAVEN" என்னை ரொம்ப கவர்ந்த புத்தகம்.

    இன்னொரு தடவை டைம் கிடைத்தால் முயற்சிக்கலாம்.

    தற்போது நான் கொண்டிருக்கும் புத்தகம் 6174(நன்றி:க.கா). சூப்பர்ன்னு சொல்ல முடியாவிட்டாலும் நாட் bad! : )!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. லயன் ப்ளாகில் ரசவாதம் பற்றி நாம காமெடியா பேசினதும், அடுத்த சில வாரங்களில் நான் இந்தப் புத்தகத்தைப் படிச்சு முடிச்சதும், அதுக்கான விமர்சனப் பதிவில் முதல் கமெண்டு உங்களுடையாதாக வருவதும் - இவையெல்லாம் தற்செயல் தானா? இல்லை ஏதோ good omen-ஆ?! ;)

      நீங்களாவது பரவாயில்ல, இந்த புத்தகம் என் ஃஷெல்பில் மூணு வருஷமா தூங்கிட்டு இருந்துச்சு! :) பலமுறை எடுத்து, நாலஞ்சு பக்கங்கள் மட்டும் படிச்சுட்டு பிடிக்காம திருப்பி வச்சுருக்கேன்! ஆனா, சனிக்கிழமை உட்கார்ந்து சில மணி நேரங்களில் மொத்த புக்கும் படிச்சு முடிச்சேன்! கதை நகர, நகர அப்படி ஒரு சுவாரசியம்! வேணும்னா இதோட கிராஃபிக் நாவல் வெர்ஷனை முயற்சித்துப் பாருங்களேன்?!

      //"THE FIVE PEOPLE YOU MEET IN HEAVEN"//
      பரிந்துரைக்கு நன்றி! 6174-ம் எனது படிக்கும் லிஸ்டில் இருக்கிறது - அடுத்த சில வருடங்களில் படித்து விடுவேன்! :D

      நீக்கு
  2. // "இலக்கை அடைய தீர்மானித்தவனை, உலகிலுள்ள ஆன்மாக்கள் அனைத்தும் ஒன்று கூடி வழிநடத்தும்!" என்று கூறி ஊக்குவிக்கிறார்! //

    ஒரு Top Seller புத்தகம் உலகம் முழுவதிலும் உண்டுபண்ணும் Impact ஆச்சரியமானது. மேலே குறிப்பிட்ட விஷயத்தை/வரிகளை எந்தளவுக்கு நிஜவாழ்க்கையோடு பிணைத்துப் பார்க்கவேண்டும் என்பது ஆளுக்கு ஆள், கலாச்சாரத்துக்குக் கலாச்சாரம் வேறுபடுகிறது.

    அடுத்த Not so தற்செயல்: 10 ஆண்டுகளுக்கு முன்பு நான் பணிபுரிந்த நிறுவனத்தின் Boss மேற்கண்ட வரிகளை அடிக்கடி கூறி எங்களை ஒருவழி பண்ணிக் கொண்டிருந்தார் :D அவருடைய Friendly வற்புறுத்தலின் காரணமாக படிக்க ஆரம்பித்து, பின்னர் முழு புத்தகத்தையும் ஒரு மாதிரி முடித்தேன். நிறுவனத்தின் ஒரு 2-3 ஆண்டுகள் தொடர் சொதப்பல்களுக்கு பாஸின் இம்மாதிரியான தீவிர நம்பிக்கைகள் காரணம் என்று ஒரு கட்டத்தில் தெரிந்து, நான் உட்பட சிலர் தெறித்து ஓடியேவிட்டோம் - வேலையைவிட்டு!

    On core topic: பொதுவாக Metaphor சம்பந்தமான விஷயங்கள் நமக்கு புதிய Concept'களை அறிமுகப்படுத்தும் பட்சத்தில் ஆழமாக ஒட்டுமா என்பது சந்தேகமே. அதேநேரம் பின்னாட்களில் நாமாகவே அதே விஷயங்களை Discover பண்ணும்போதுதான் புத்தகத்தின் நிஜமான அறிமுகம் கிடைக்கும்! ;)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //Metaphor சம்பந்தமான விஷயங்கள் - நாமாகவே Discover பண்ணும்போதுதான் புத்தகத்தின் நிஜமான அறிமுகம் கிடைக்கும்!//
      உண்மை ரமேஷ்! இது போன்ற புத்தகங்களில் உள்ள கருத்துக்களை literal ஆக புரிந்து கொண்டு, அச்சு பிச்சு என்று செயல் பட்டால் அதோ கதி தான்! :D

      நீக்கு
    2. இதன் கிராபிக் நாவல் வடிவம் - அபாரமானது - நூல் ஆசிரியரால் பாராட்டப்பெற்றது ! அவசியம் அனைவரும் படிக்கவும் !

      நீக்கு
  3. Jonathan Livingston Seagull என்ற ஒரு சிறு புத்தகம் உள்ளது - நூற்றி இருபது ரூபாய் இருக்கலாம் - எழுபதுகளில் இதே போல் உலகைக் கலக்கிய புத்தகம் - படித்துப் பார்க்கவும்

    பதிலளிநீக்கு
  4. " உண்மையில், ஒரு கட்டத்திற்கு மேல் நம்மை வளர்த்துக் கொள்ள, நாமே விரும்புவதில்லை! கையில் இல்லாத ஒன்றை அடைவதற்காக, கைவசம் இருக்கும் சுகங்களைக் விட்டுத் தர நமக்கு மனம் வருவதில்லை! மாற்றத்திற்கு பயந்து, "போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து! "

    மிகவும் உண்மையான வார்த்தைகள்.

    " நம்மை அடுத்த நிலைக்கு உயர்த்திக் கொள்ள வைக்கும் மூலப் பொருளை வேறெங்கும் தேடத் தேவையில்லை - நம்முள் இருக்கும் ஒன்றுபட்ட ஆன்மாவை உற்று நோக்கினாலே போதும், நமக்குரிய புதையலை நாம் அடையலாம்!"
    " தான் முன்பொரு நாள் படுத்துறங்கி கனவு கண்ட அந்த தேவாலயத்திலேயே, பெரும் புதையலைக் கண்டெடுக்கிறான் - அவனது கனவு மெய்ப்படுகிறது! "

    கதையின் METAPHORல் ஒளிந்திருக்கும் செய்தி ! இல்ல... புரியற மாதிரி குழப்பறேனா ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதே! அந்தப் புத்தகம் சொல்ல வரும் இன்னொரு விஷயம், என்னதான் கைக்கு அருகிலேயே புதையல் இருந்தாலும், சிரமப் படாமல் அதை அடைய முடியாது! இதில், புதையல் என்பதே இன்னுமொரு metaphor தான்! எது புதையல் என்பது, ஆளைப் பொருத்து வேறுபடும் விஷயம் இல்லையா?! :)

      நீக்கு
  5. I have read the Graphic Novel format of this book.. It did have some good messages in it :). Anyway it is quite a new ineteresting experience to read that book's quotes in Tamil

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Thank you VImalaharan! :) Looks like Kalachuvadu Publications has already released this book in Tamil - ரசவாதி!:
      http://www.amazon.in/Rasavaathi-Chinnathampi-Murugesan-Paulo-Coelho/dp/8189359436

      Even I would love to read this in Tamil; but I've already ordered the GN version of this book! Reading it for a 3rd time, in yet another format will be a overkill! :D

      நீக்கு
  6. என்னை கவர்ந்த புத்தகங்களில் இதுவும் ஒன்று. மிகவும் அருமையாக நண்பா. என்னுடைய தளத்தில் எனக்கு தெரிந்த வரையில் விவரித்து உள்ளேன்.. அதை படிக்க
    https://www.jaimuruganwriter.com/ என்ற என்னுடைய தளத்திற்கு செல்லவும்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் ப்ளேடு: https://www.facebook.com/Bladepedia