நில்லுங்கள் ராஜாவே!

என் கண்ணெதிரே, கடந்த ஆகஸ்ட் மாதம் 'ஈரோடு புத்தக விழாவில்' நண்பர் விஜய் அளித்த "ஆ"-வும்; இரு மாதங்கள் கழித்து, 'திக்குத் தெரியாத தெற்கில்' மற்றொரு நண்பர் தினா தந்த "நில்லுங்கள் ராஜாவே"-வும் கிடந்தன! "ஆ"-வின் பக்கங்கள் 186 என்பதைக் கண்டதும், "ஆ" என அலறி, அடுத்த புத்தகத்திற்குத் தாவினேன்; 140... ஓகே, மோசமில்லை!

காமிக்ஸ் மட்டும் படித்துப் பழகிவிட்டு - நாவல்கள் மற்றும் எழுத்து வடிவிலான புத்தகங்களின், முதல் 10 - 20 பக்கங்களைப் கடப்பதற்குள் - புத்தகம் கைகளில் இருந்தும், கண்கள் கட்டுப்பாட்டில் இருந்தும் சரியத் துவங்கி, ஆழ்ந்த உறக்கம் என்னை ஆட்கொண்டு விடுகிறது; இவ்வியாதிக்கு பெயர் ஏதும் உள்ளதா எனத் தெரியவில்லை!

ஆனால், சுஜாதாவின் நில்லுங்கள் ராஜாவைப் படிக்கத் துவங்கிய போது, சுமார் 50 - 60 பக்கங்களைக் கடந்த பிறகே தூக்கத்திற்கு தலையாட்டினேன், மீதத்தை மறுநாள் இரவுக்கு ஒத்தி வைத்து விட்டு! இப்படியாக, வெகுநாட்களுக்குப் பின்னர் ஒரு முழு நாவலை, இரு இரவுகளில் முழுமையாக வாசித்து முடித்திருக்கிறேன்!

ஜவஹர் விட்டல் என்னும் நபர் விவரிப்பதாகத் துவங்கும் கதை, அடுத்த நாற்பது பக்கங்களுக்கு அவன் பார்வையிலேயே நகர்கிறது! திடீரென ஒரு நாள் அவனுக்கு பதிலாக வேறு எவனோ ஒருவன், தன்னை 'ஜவஹர் விட்டல்' என்று சொல்லிக் கொண்டு திரிகிறான் - அலுவலகத்திலும், வீட்டிலும்! மனைவி, குழந்தை, நண்பர்கள் என எவருக்கும் இவனை அடையாளம் தெரியாது போகிறது! தொடரும் குழப்பங்களால் சிறையில் அடைபட்டு, தன் அடையாளத்தை மீட்டுத் தருமாறு கணேஷ் / வசந்திடம் முறையிடுகிறான்! ஜாமீனில் எடுத்து வெளியே விட்டவுடன், ஆள் எஸ்கேப்; அவனைப் தேடிப் பிடித்தால், தன் பெயர் ராஜா என்று புதிதாகக் குழப்புகிறான்! என்ன தான் நடந்தது?!

துவக்கம் முதலே பரபரக்கிறது கதை, இடையிடையே மெலிதான நகைச்சுவையுடன்! சுஜாதாவின் சலிப்பு தட்டாத இலகுவான, சுவாரசியமான தமிழ் வேகமாக கதையை நகர்த்திச் செல்கிறது 100 பக்கங்கள் தாண்டியதும் கதை மேற்கொண்டு எப்படி நகரப் போகிறது என்பது தெளிவாக தெரிந்து விட சற்றே அசுவாரசியத்துடன் தொடர்ந்தேன்; அடுத்த இருபது பக்கங்களில், 'அந்நிய நாட்டு அதிபரைக் கொலை செய்யும் முயற்சி' என்று ஒரு 'அர்ஜூன் பட பாணித்' திருப்பம்! 'போச்சுடா' என சலித்துக் கொண்டு, ஒரு சராசரி தமிழ்ப் பட க்ளைமேக்ஸை எதிர்பார்த்து படித்துக் கொண்டிருந்த எனக்கு, கடைசி பக்கம் சற்று ஆறுதல் அளித்தது!

கதையின் நம்பகத் தன்மையைக் கூட்டுவதற்காக ஆங்காங்கே, மனோவியல் புத்தகங்களில் இருந்து தரப்பட்டிருக்கும் சிறு சிறு மேற்கோள்கள், ஆராய்சிக் குறிப்புகள்; இன்றைய விக்கி+கூகிள் யுகத்தில் பெரிதாகத் தோன்றாது போகலாம்! அர்ஜூன் பட பாணித் திருப்பங்களை சட்டென இனங்காண்பது நமக்கு பழகியிருக்கலாம்! ஆனால், கதை எழுதப் பட்டிருப்பது ஏறத்தாழ 30 வருடங்களுக்கு முன்னர் என்ற கோணத்தில் யோசிக்கும் போது, மனதுக்கு ரொம்பவே பிடித்துப் போகிறது! இத்தனைக்கும், பழைய கதை என்ற நினைப்பு ஓரிரு இடங்களைத் தவிர (ஹெரால்டு கார்?!) வேறெங்கும் தலை தூக்கவில்லை! நிச்சயம் படமாக எடுக்கலாம், ஆனால் நம் இயக்குனர்கள் சூப்பராக சொதப்பும் வாய்ப்பு பலமாக இருக்கிறது!

முன்னுரையில், சில சுவாரசியத் தகவல்களைப் பகிர்ந்துள்ளார் சுஜாதா! சாவியின் முதல் இதழில் துவங்கி, தொடராக வந்திருக்கிறது இக்கதை! சாவியில் நடிகைகளின் படங்களை அட்டையில் போடாததால் சர்குலேஷன் சரிந்ததாம்! குமுதத்தின் ஆசிரியராக சுஜாதா இருந்த போது, அப்படியொரு விஷப் பரிட்சையை அவரும் மேற்கொண்டாராம் - ஒரே ஒரு வாரம் ஆண் நடிகரை அட்டையில் போட்டதால், சர்குலேஷனில் ஒரு லட்சம் அடி விழுந்ததாம்!

அட்டையில் மட்டுமல்ல - தனது நாயகனுக்கும், பெண் ஜோடியைப் போடாமல், ஒரு ஆண் துணைப் பாத்திரத்தைப் போட்டிருக்கிறார். சிறுவயதில் விவேக்+ரூபலா, பரத்-சுசீலா & நரேன்-வைஜெயந்தி - இந்த ஜோடிகளிடம் இருந்த ஈர்ப்பு கணேஷ்-வசந்திடம் இருந்ததாக நினைவில்லை! ஆனால், சுஜாதாவின் இந்த நாவலை இன்றும் ரசிக்க முடிகிறது - முதலில் சொன்ன ஜோடிகளை இப்போதும் ரசிக்க முடியுமா என்பதை படித்துப் பார்த்து விட்டுதான் சொல்ல முடியும்!

சுஜாதாவின் நாவல்கள் சிலவற்றை பள்ளிப் பருவத்தில் படித்ததோடு சரி; பிறகு வாரப் பத்திரிக்கைகளில் அவ்வப்போது அவரின் கட்டுரைகளைப் வாசித்திருக்கிறேன்; இனி அடிக்கடி வாசி(க்க முயற்சி)ப்பேன்!

இறுதியாக... கொஞ்சம் காமிக்ஸ் பற்றும்...:
வரும் கஸ்ட் மாதம், லயன் காமிக்ஸ் 30ம் ண்டு மலர், மேக்னம் ஸ்பெஷல் என்ற பெயரில், யிரம் பக்கங்களில் வெளியாகிறதாம்! யிரம் பக்கங்களுக்கும் ஒரே கதை(த் தொடர்) அல்ல என்பது பலருக்கு னந்தத்தையும்; நான் உட்பட ஒரு சிலருக்கு, தங்கத்தையும் அளித்திருக்கிறது! காமிக்ஸ் படிக்கும் எனக்கு, நீண்ட நாவல்கள் யாசத்தைத் தருகின்றன! நாவல் படிப்பவர்களின் மனநிலையில் என்னை வைத்து சற்றே சிந்தித்துப் பார்க்கிறேன்: "ஆ!" என்ற வார்த்தை மட்டுமே என் வாயில் இருந்து வருகிறது! கட்டும், அந்த லைனைத் தாண்டி நானும் வர மாட்டேன், நீங்களும் வராதீங்க நாவல் வாசகர்களே! :)

கொஞ்சம் தேசப் பற்றும்...:
பெங்களூரில் 54% மட்டுமே ஓட்டுக்கள் பதிவாகியிருப்பது கவலைக்குரிய விஷயம். அந்த 54%-ல் என் வீட்டில் உள்ள வாக்காளர்கள் அனைவரும் அடக்கம் என்பதில் கொஞ்சம் பெருமை! அடுத்த வாரம், ஓட்டு போட மறவாதீர்கள் நண்பர்களே! :)
கறை நல்லது!
Image Credits: Wikipedia & NHM

கருத்துகள்

  1. இந்த புக் என் ஷெல்ப்ல தூங்கிக்கிட்டு இருக்கு - படிச்சு பாக்கறேன் ! சுஜாதா அவர்களே தன் கதைகளை இயக்குனர்கள் இப்படிப் படம் எடுப்பார்கள் என்று எழுதி இருக்கிறார் - மிகச்சிறந்த நகைச்சுவை பக்கங்கள் அவை - தொகுதியாய் அல்லாமல் தனித்தனி கட்டுரைகளில் பிரிந்துக் கிடக்கிறது!

    இதையும் அதே போல் சொதப்புவார்கள் - என்ன ஹீரோ இன்னும் சில கொடிகள் பெற்றுக்கொள்வார் - நாம் வயித்தெரிச்சல் :-D

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்ககிட்ட இருக்குற அதே புக்குதான் என் ஷெல்ஃபிலும் தூங்குது! அதை தட்டி எழுப்பப் போறேங்கறீங்க?! :) என் ஷெல்ஃபிலும் பல புத்தகங்கள், மீளா கோமாவில்! :(

      நீக்கு
  2. 2011இல் வெளிவந்த ஹாலிவுட் படமான UNKNOWN இதே கதை!

    பதிலளிநீக்கு
  3. சிறந்த நாவல்களை எழுதியதையும் தாண்டி, தமிழின் மிக சிறந்த non fiction எழுத்தாளர் சுஜாதா அவர்கள். அறிவியலின் எந்த விதியையும் வாசகருக்கு புரியும்படி எளிதாக விளக்ககூடியவர். அவரின் சிரீரங்கத்து தேவதைகள், கனையாழியின் கடைசி பக்கங்கள் மற்றும் கற்றம் பெற்றதும் ஆகிய நூல்கள் உங்களுக்கு பிடிக்கும் என தோன்றுகிறது.

    இந்திய தேர்தல் ஆணையம் உபயோகிக்கும் ஓட்டு இயந்திரத்தை வடிவமைத்ததில் சுஜாதாவின் பங்கு நிறைய உண்டு என்பதை இந்த தேர்தல் சமயத்தில் நினவுகூற விரும்புகிறேன்.

    எனது புதிய கட்டுரை : தேர்தல் திருவிழா !
    http://saamaaniyan.blogspot.fr/2014/04/blog-post_18.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பரிந்துரைகளுக்கு நன்றி நண்பரே!

      //ஓட்டு இயந்திரத்தை வடிவமைத்ததில் சுஜாதாவின் பங்கு நிறைய உண்டு என்பதை இந்த தேர்தல் சமயத்தில் நினவுகூற விரும்புகிறேன்//
      ஓட்டுச் சாவடியில் அந்த நினைவு வந்தது உண்மை!

      நீக்கு
  4. கிட்டத்தட்ட சுஜாதாவின் எழுத்து நடையை அப்படியே பிரதிபலிக்கும் ஒருவர், இதுவரை அவரது கதைகளை அதிகம் படித்திருக்கவில்லை என்பது ஆச்சரியம் தான்! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்களும் பல பதிவுகளில் இதைச் சொல்லியே நெளிய வைக்கறீங்க விஜய்! மேக்னம் ஸ்பெஷலுடன், மியாவி கலெக்ஷனை ஒப்பிடலாமா?! :P

      நீக்கு
  5. Good story. I bought all Sujathaa stories in book fair. I read this story too. But I couldnt associate title and story :-(. Am I loosing grey matter :-)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //I couldnt associate title and story :-(. Am I loosing grey matter :-)//
      Certainly not! :D The edition of this book which I own, carries a foreword from Sujatha himself. And in that he mentions about this 'very matter'! ;) He was given this 'catchy' title by the editor of Savi magazine and was asked to start a (weekly) series around it. So, in order to justify it, Sujatha has forcefully inserted that sentence as part of the story (in one of the episodes, a lady would shout at the hero asking him to stop: நில்லுங்கள் ராஜாவே!)

      நீக்கு

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் ப்ளேடு: https://www.facebook.com/Bladepedia